ஈமுவை ஈமு சாப்பிடும் அவலம்: விடிவு எப்போது? கண்ணீர் சிந்தும் மக்கள்

ஈமு வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம், ஈமு தொழிலில் முதலீடு செய்தால் தங்க நாணயம் பரிசு என்று கவர்ச்சிகரமான ஊடகங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை நம்பி பல ஆயிரம் விவசாயிகள் ஈமு பண்ணையாளர்களிடம் லட்சம் லட்சமாக பணத்தை முதலீடு செய்தனர்.
மாதம்தோறும் ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் என்ற அறிவிப்பும் விவசாயிகளை ஈர்த்தது. ஆனால் நடந்தது என்னவோ வேறு. விவசாயிகளிடம் இருந்து பெற்ற பணத்தை தீவனம் வாங்கக் கூட செலவழிக்காக ஈமு பண்ணை நிறுவனத்தினர், நடிகர் நடிகையர்களைக் கொண்டு விளம்பரப்படம் எடுத்தனர். அதை ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளியிட்டனர். விளைவு? பணத்தை முதலீடு செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தரமுடியவில்லை. விளம்பரத்தை வெளியிட்ட உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கும் நாளிதழ்களுக்கும் பட்டை நாமத்தை சாத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
பணத்தை முதலீடு செய்தவர்களோ கண் கெட்ட பின்னர் சூரியனை வணங்குவதைப்போல ஓடிப்போன நிறுவனத்தினரை தேடி அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய ஈமு கோழிகளின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. தீவனமும், தண்ணீரும் இன்றி பசியால் வாடி மயங்கி விழுகின்றன.
சில பண்ணைகளில் பராமரிப்பு ஊழியர்களும் தலைமறைவானதால் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் செத்து மடிகின்றன. இதனால் பண்ணைகளை கையகப்படுத்திய கால்நடைத்துறை அதிகாரிகளும் கையை பிசைந்து நிற்கின்றனர். இதை விட அவலம் செத்து மடிந்த ஈமு கோழிகளை பிற கோழிகள் கொத்தித் திண்ணும் காட்சிதான் காண்போரின் நெஞ்சினை பதைபதைக்கச் செய்திருக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க இறந்த ஈமு கோழிகளை புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஈமு கோழிகளுக்கு தீவனம் கிடைக்காமல் இருப்பது விலங்குகளுக்கு எதிரான வன்முறை என்று The Federation of Indian Animal Protection Organizations (FIAPO) விமர்ச்சித்துள்ளது. தமிழ்நாட்டில் ஈமு வளர்ப்புத் தொழில் தோல்வியடைந்து விட்டதாகவும், பசியால் துடிக்கும் கோழிகளைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் Animal rights organisation PETA பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
போட்ட பணம் கிடைக்காமல் போன அதிர்ச்சி ஒரு பக்கம் தீவனம் போட முடியாத சூழ்நிலை ஒருபக்கம் வாட்டி வதைக்க வந்த விலைக்கு கோழிகளை விற்க ஆரம்பித்துள்ளனர் விவசாயிகள். இவர்களின் இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் விழா, காது குத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஈமு கோழிகளை ஆயிரம் ரூபாய்க்கும் இரண்டாயிரம் ரூபாய்க்கும் கேட்கின்றனராம்.
தரமற்ற தீவனத்தை இதுநாள் வரை கொடுத்து வந்ததாலேயே சில நாட்களுக்கு கூட பசியை தாங்க முடியாமல் ஈமுகோழிகள் செத்து விழுவதாக ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரகுமார். ஈமு கோழிகள் 45 நாட்கள் வரை தண்ணீர், உணவு இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை. ஆனால் இப்போது உணவு இல்லாமல் 10 நாட்களிலேயே அவை இறந்துவிடுகின்றன. அதற்குக் காரணம், அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட தீவனங்கள் தரம் இல்லாதவை என்பதால்தான். இந்த நிறுவனங்கள் ஒன்றுக்குக்கூட சொந்தமாகத் தீவனக் கம்பெனி இல்லை. அதனால் உண்மையான தீவனங் களைக் கொடுக்காமல், வெறும் தவிடு மட்டுமே கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள். சத்து இல்லாத தவிட்டைத் தின்று இத்தனை நாட்கள் அந்த ஈமு உயிர் வாழ்ந்ததே அதிசயம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். ஈமு வளர்ப்பானது, ஒப்பந்த நிறுவனங்கள் சொல்வதுபோல அபரிமிதமான லாபம் தரும் தொழில் அல்ல. ஆனால் நிச்சயமாக, நியாயமான லாபம் தரக்கூடிய ஒன்றுதான் என்றும் ராஜேந்திரகுமார் கூறினார்.
பருவ நிலை மாற்றம் காரணமாக சில கோழிகள் இறந்துவிட்டன. அதற்காகத் தனி மருத்துவக் குழு அமைத்து சிகிச்சை செய்துவருகிறோம். தமிழகம் முழுவதும் இந்த நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு, இப்போது உணவு இல்லாமல் தவிக்கும் கோழிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டது குறித்து பேசிய கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, சட்டசபையில், 'ஈமு கோழித் தொழிலுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அங்கீகரிக்கவும் இல்லை' என்று ஏற்கெனவே எச்சரிக்கை கொடுத்து இருக்கிறேன். மக்கள் இதுபோன்ற முதலீடுகளில் இனியாவது ஜாக்கிரதையாகவும் அதிக விழிப்பு உணர்வோடும் இருக்க வேண்டும் என்றார். கால்நடைத் துறை சார்பாக இப்போது ஈமு கோழிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய பலவழிகள் இருக்கையில் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவனங்களிலும், இதுபோன்ற மோசடி கும்பலிடமும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்குமா என்ற நிலை ஒரு புறம் இருக்க வாங்கிய கோழிகளை என்ன செய்வது எப்படி காப்பாற்றுவது என்று செய்வதறியாமல் திகைக்கும் விவசாயிகளின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.












Click it and Unblock the Notifications