கீதிகா தற்கொலை வழக்கு: இனியும் தப்ப முடியாத கோவிந் கந்தா அதிகாலையில் சரண்!
டெல்லி: விமான பணிப்பெண் கீதிகா தற்கொலை வழக்கில் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வந்த அரியானா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா இன்று அதிகாலை டெல்லி அசோக் விஹார் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
விமான பணிப்பெண் கீதிகா தற்கொலை செய்து கொண்ட எழுதி வைத்த கடிதத்தில் கோபால் கந்தாதான் தமது மரணத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து கந்தா நீக்கப்படார். அவரை கைது செய்ய போலீசார் தேடியபோது ஓடி ஒளிந்து தலைமறைவானார். அவர் வலைவீசி தேடப்பட்டு வந்தார். அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோபால் கந்தா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கோபால் கந்தாவின் முன்ஜாமீன் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதையடுத்து வேறுவழியின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் டெல்லி அசோக் விஹார் காவல்நிலையத்துக்கு சென்ற கோபால் கந்தா தாம் சரணடைவதாகக் கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் கோபால் கந்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications