ரங்கசாமி ஆட்சியா, இல்லை ரவுடிகள் ஆட்சியா... நாராயணசாமி டென்ஷன்!
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி பேசுகையில்,
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் காவலில் இருந்த கைதி ஜெகனை போலீசார் அழைத்து சென்ற போது 20-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வழிமறித்து கைதி ஜெகனை வெடிகுண்டு வீசி கொன்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை பிடிக்காமல் தப்பவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து புதுவை நகரின் மையப்பகுதியிலும், குமரகுரு பள்ளத்திலும் வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்துள்ளது.
புதுவையில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டதாக பொதுமக்கள் பலர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு வருகின்றனர்.
ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபிறகு புதுவையில் ரவுடியிசம் பெருகி உள்ளது. தொடர் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, வீடு- நிலம் அபகரிப்பு, வெடிகுண்டு சம்பவங்கள் பெருகி உள்ளது. ஜெயிலில் உள்ள கைதிகள் செல்போன் மூலம் வியாபாரிகளை மிரட்டி வருகின்றனர்.
இது குறித்து புதுவை மாநில ஐ.ஜி.யிடம் விளக்கம் கேட்டுள்ளேன். ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபிறகு புதுவை ரவுடிகளின் ராஜ்யமாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ரங்கசாமியிடம் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் ரவுடிகளில் பாதிபேர் அவரது தொகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கோப்புக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்ல.
மேலும் அந்த ரவடிகளுக்கு நேர்முகமாகவும், மறை முகமாகவும் ரங்கசாமியின் ஆசி உள்ளது. புதுவையில் தற்போது நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் புதுவை ஐ.ஜி.க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்றார்.