தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தமிழக வெற்றிக் கழத்தில் இணைந்திருக்கின்றனர். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விசிக பொருளாளர் எஸ்எஸ் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை.

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்பதால், விஜய்க்கு ஆதரவளிக்கிறோம் என்று காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக கூறி முன் வந்தன. தவெக ஜெயித்தது மொத்தம் 107. இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் ஆட்சியமைக்கலாம். எனவே காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4, ஐயுஎம்எல் 2 மற்றும் விசிக 2 என 13 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்து.
அதிமுகவில் பிளவு
இதுபோக, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது அதிமுகவிலிருந்து ஒரு டீம் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அதாவது மொத்தம் இருந்த 47 எம்எல்ஏக்களில் 25 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு டீம் என்றும், எடப்பாடி பழனசாமி தலைமையில் ஒரு டீம் எனவும் கட்சி இரண்டாக உடைந்தது.
எம்எல்ஏக்கள் ராஜினாமா
இப்போது வேலுமணி டீமில் இருந்த எம்எல்ஏக்களில் 3 பேர், மதுராந்தகம் எம்எல்ஏ மரகம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரனிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த கடிதத்தை ஆய்வு செய்த சபாநாயகர், ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக அறிவித்தார்.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. என்னங்க இது.. முதலில் இவர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள், இப்போது தவெகவில் இணைய தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமாவே செய்துவிட்டார்களே என்று விமர்சனங்கள் எழுந்தன.
விசிக விமர்சனம்
இப்படி இருக்கையில், இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்எஸ் பாலாஜி கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். 3 எம்எல்ஏக்களின் செயல் அறமற்றது. அந்த எம்எல்ஏக்களை ஆதரிப்பது ஆபத்தானது என்று கூறியிருக்கிறார். உண்மையான, நேர்மையான அரசியலில் ஈடுபடுவோம் என்கிற தவெகவின் கூற்றுக்கு இது அச்சுறுத்தல் என்றும் விமர்சித்திருக்கிறார்.
ஏற்கெனவெ, தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற்றிருக்கிறது. சமூகநீதித்துறை அமைச்சராக விசிகவின் வன்னியரசு இருக்கிறார். இப்படி இருக்கையில், எஸ்எஸ் பாலாஜியின் விமர்சனம் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications