திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கடந்த 10 நாட்களில் சுமார் 4 முறை உயர்ந்தது மூலம் எரிபொருள் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. ஆனாலும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மார்கெட்டிங் நிறுவனங்கள் (OMCs) தினமும் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான இழப்பை சந்தித்து வருகின்றன.
மே 25-ம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.61 உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ.2.71 அதிகரித்துள்ளது. 4வது மூறை விலை உயர்வு மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மொத்தமாக ரூ.7.50 வரை உயர்ந்துள்ளது. சுமார் 4 வருடங்களாக விலை மாறாமல் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் 4 முறை உயர்த்தப்பட்டு உள்ளது.

உலக அளவில் பெட்ரோல் விலை 22 சதவீதமும், டீசல் விலை 27 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை வெறும் 7.7 சதவீதமும், டீசல் 8.6 சதவீதமும் மட்டுமே உயர்ந்துள்ளது என்று பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா தெரிவித்தார்.
விலை உயர்த்துவதற்கு முன்பு அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததன் மூலம் அரசுக்கு ரூ.14,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும், விலை உயர்வுக்கு முன்பு அரசு நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 கோடி இழப்பை சந்தித்தன. தற்போது விலை உயர்த்திய பிறகு இழப்பு குறைந்துள்ளது. ஆனாலும் இன்னமும் தினமும் ரூ.600 கோடி அளவுக்கான இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது. அதாவது 1 மணிநேரத்திற்கு 25 கோடி இழப்பை மத்திய அரசு எதிர்கொண்டு வருகிறது. இந்த இழப்புக்கு முக்கிய காரணம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவும் தான்.
மேலும் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் தரவுகளின்படி, பிப்ரவரியில் ஒரு பேரல் 69.01 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, மே மாதத்தில் 107.84 டாலராக உயர்ந்துள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பின் தான் இந்த அதிரடியான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது எரிசக்தித் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், உலக விலை உயர்வு இந்தியாவை நேரடியாக பாதிக்கிறது.
பெட்ரோல் விலை உயர்வு நேரடியாக குடும்பச் செலவை அதிகரிக்கிறது. டீசல் விலை உயர்வு போக்குவரத்து மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தி, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் பாதிக்கிறது. அரசு வரியை குறைத்தும், விலையை உயர்த்தியும் இழப்பை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து விலை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் மீது இந்த எரிபொருள் விலை உயர்வு மற்றும் இழப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications