"கல்லும் முள்ளும்" காலம் மலையேறிவிட்டது! இனி ஹெலிகாப்டரில் அய்யப்பனை தரிசனம் செய்யலாம்

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிப்சான் ஏ யேசன் என்ற நிறுவனம் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியிருக்கிறது. 5 பேர் பயணம் செய்ய ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பாபு, ஹெலிகாப்டர் சேவை நிறுவன இயக்குநர் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சபரிமலையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ள பெருநாடு என்ற இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சாலைமார்க்கமாக அடிவாரமான பம்பைக்கு சொகுசு காரில் அழைத்துச் செல்லப்படுவர்.
சபரிமலையில் அய்யப்பசாமி கோவில் நடை திறக்கப்படும் நாட்களில் இந்த ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை நடத்தப்படும். ஹெலிகாப்டரில் பைலட் தவிர 5 பேர் பயணம் செய்யலாம்.
சராசரியாக மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர், ஒரு மணி நேரத்தில் கொச்சியில் இருந்து பெருநாடு சென்றடையும். இதேபோல் கொச்சியில் இருந்து குருவாயூர் கோயிலுக்கும் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications