கடலூர் மருத்துவமனையில் தாயிடமிருந்து நூதன முறையில் பெண் குழந்தை திருட்டு
கடலூர்: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நூதன முறையில் பச்சிளம் பெண் குழந்தையை தாயிடம் திருடிவிட்டு ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த பிரகாஷின் மனைவி கிருஷ்ணவேணி பிரசவத்துக்காக கடந்த 27-ந் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்று இரவே பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் இன்குபெட்டர் கருவியில் குழநதை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழந்தைக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்கேன் அறைக்கு குழந்தையுடன் சென்று அவர் காத்திருந்தார். அப்போது அங்கு நடமாடிக் கொண்டிருந்த ஒரு நபர் கிருஷ்ணவேயிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் கையில் இருந்த மருந்துசீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு இதில் டாக்டரின் கையெழுத்து தேவைப்படும்.. அதனால் டாக்டரிடம் போய் கையெழுத்து வாங்கி வருமாறும் அதுவரை தாம் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அந்த மர்ம நபர் கூறியிருக்கிறார். இதை நம்பிச் சென்ற கிருஷ்ணவேணியிடம் அங்கிருந்த நர்சு ஒருவர் டாக்டர் கையெழுத்து போட்டுவிட்டார் என்று கூறியிருக்கிறார். மீண்டும் ஸ்கேன் அறைக்கு அந்த பெண் வந்தபோது தமது குழந்தையுடன் மர்ம நபர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. நூதன முறையில் குழந்தையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications