தேனி காட்டு பகுதிகளில் பயங்கர தீ: விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசம்
தேனி: தேனி, போடி ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் காட்டு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது. இதில் ஏராளமான விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையாக உள்ள தென் மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் காடுகள் உள்ளது. தேனி, போடி ஆகிய பகுதிகளில் உள்ள காடுகள் மிகவும் அடர்த்தியானவை. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தேனி, போடி ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் தீ பிடித்து தொடர்ந்து எரிந்து வருகிறது.
காட்டு பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ வேகமாக பரவி வருகிறது. இதில் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. காட்டு தீ காரணமாக வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதி, போடி வனப்பகுதிகளில் வசித்து வரும் காட்டெருமைகள், சிறுத்தை புலிகள் உட்பட பல காட்டு விலங்குகள் தீயில் சிக்கி இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் அளவில் காட்டு தீ பற்றி எரிந்து வருவதால் வனத்துறையினர், தீ அணைக்க போராடி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது,
மழை இல்லாததால் காட்டு பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் காட்டு தீ ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. காட்டு வழியாக செல்லும் மர்மநபர்கள், தீ வைத்துவிட்டு செல்ல வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விசாரித்து வருகிறோம்.
காட்டில் தீ வைக்கும் நபர்கள் யாராவது சிக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காட்டில் பரவி வரும் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறோம் என்றனர்.