கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்காது: விஜயகாந்த்

தனது பிறந்தநாளையொட்டி தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜய்காந்த் பேசுகையில்,
முன்பு 2ஜி ஊழல் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் தற்போது அதைவிட பெரிய ஊழலாக ரூ.1.86 கோடி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்சியாளர்கள் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கிரானைட் குவாரிகள், மணல் குவாரிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. இதனால், சாலைப் பணி, குடிநீர் பணி, அடிப்படை வசதிகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தம் எடுக்கக்கூட ஆள்கள் வருவதில்லை.
தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்துவிட்டதால் கொள்ளையர்கள் எல்லாம் அவரவர் மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், அவர்கள் யாரும் ஓடவில்லை. இங்கேதான் சுற்றி, சுற்றி வந்து கொள்ளையடித்து வருகின்றனர்.
கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டை அதிமுக அரசு அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போது, கூடங்குளம் மின்சாரம் மொத்தமும் தமிழகத்துக்கு வேண்டும் என்கிறார் ஜெயலலிதா.
மாநில அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. எனவே, கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கு வராது.
திமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியிலாவது மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என்றால் அதுவுமில்லை. ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை
திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக காவல் துறையாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக காவல் துறையாகவும் மாறிவிடுகிறது. காவல் துறையினர் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். ஆட்சியாளர்களுக்காக பணியாற்றக் கூடாது.
ஒரு சில மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்கள் நல்லவர்களாக உள்ளனர். ஆனால், பெரும்பாலானோர் ஆளும் கட்சியினராக செயல்படுகின்றனர்.
தமிழகத்தில் மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளில் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி மலையில் வசிக்கும் பல குழந்தைகள் தலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஒருவருக்கு மட்டும் ரூ.3 கோடி செலவாகும். தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ள 8 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அவர்களை தத்தெடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications