இலங்கை கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து கோடியக்கரை மீனவர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்
வேதாரண்யம்: தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரைக் கண்டித்து கோடியக்கரை மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி கிராம மீனவர்கள் கடந்த 18ம் தேதி கோடியக்கரை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர். மேலும் அவர்கள் படகுகளைச் சேதப்படுத்தியதுடன் படகில் இருந்த ஐஸ் பெட்டிகள், செல்போன், மீன்கள், திசைக்காட்டும் கருவி, மற்றும் டீசல் ஆகியவற்றைக் கடலில் கொட்டி அராஜகம் செயதுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி(35), அன்புசெல்வன்(19), மகாலிங்கம்(25), முருகையன்(50), அப்புராஜ்(45), பொன்னுசாமி(45) சத்தியமூர்த்தி(37), இளையராஜா(20) ஆகிய 8 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீனவர்கள் தாக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்பகுதி மீனவர்கள் சுமார் 1,500 பேர் கடலுக்குச் செல்லாமல் இராண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications