பிடித்துச் சென்ற 13 மீனவர்களையும் விடுவித்தது இலங்கை!
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர், கைது செய்து வருகின்றனர். இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மகா அமைதியாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
எத்தனையோ முறை தமிழகத் தலைவர்கள் மத்திய அரசுக்கு காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கோரிக்கை வைத்து விட்டனர். ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
நேற்று கூட பிரதமருக்கு இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நான்காவது முறையாக கடிதம் எழுதியிரு்நதார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.
ஆனால் இவர்கள் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே இலங்கை கடற்படை தனது கேவலமான முகத்தைக் காட்டி விட்டது. அதாவது மண்டபம் பகுதி மீனவர்கள் 13 பேரை அது பிடித்துச் சென்று விட்டது.
ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க நேற்று காலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது.
கட்டைகள், பாட்டில்களை வீசி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி விட்டதாகவும், மீனவர்களில் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை பிடித்துச் சென்றுவிட்டதாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.
மேலும் இந்தத் தாக்குதலில் ஞானசேகரன் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து மண்டபம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இந்தநிலையில் பிடித்துச் சென்ற மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அங்கு வைத்து அவர்களை விசாரித்தனர். பின்னர் மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் விடுவித்தனர். இதையடுத்து இன்று மாலை தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் வந்து சேருவார்கள் என்று தெரிகிறது.
நேற்றுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது என்பது இந்தியாவுக்கு பகிரங்கமாக இலங்கை விடும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.