மதுரையில் குடிகார மகனை கொலை செய்த தாய் கைது!
மதுரை: மதுரையில் குடித்துவிட்டு தொல்லை கொடுத்து வந்த மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை அடுத்த மகாத்மா காந்தி நபர் பகுதியை சேர்ந்தவர் தத்தம்மாள். இவரது கணவர் மாரியப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தத்தம்மாளுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
திருமணமாகாத மகன் பொன்னிருள் உடன் தத்தம்மாள் வசித்து வந்தார். பொன்னிருளுக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொன்னிருள், தாயை அடித்து உதைத்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னிருள், வழக்கம் போல தாய்க்கு தொல்லை கொடுத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டார். மகனின் தொல்லையை தாங்க முடியாமல் தவித்த தத்தம்மாள், மகனின் தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பொன்னிருள் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மகனை கொலை செய்த தத்தம்மாளை கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.