விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ரயில் மறியல்: 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கைது
திருவாரூர்: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியல் செய்த 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும், ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாதாமாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் சேர்ந்து ரயில் மறியல் போராட்டதிற்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.