வரதட்சணை தராததால் திருமணம் நிறுத்தம்: மாப்பிள்ளையின் பெற்றோர் உள்பட 3 பேர் கைது
பெரம்பலூர்: வரதட்சணை கொடுக்காததால் திருச்சியில் திருமணம் நின்றுபோனது. இதையடுத்து மணமகனின் பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மனைவி தமிழ்செல்வி. அவர்களின் மகள் மகாலெட்சுமிக்கும்(21), திருச்சி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த வீராசாமி-பவீனா தம்பதியின் மகன் ராஜேசுக்கும் (29) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து இருவீட்டாரும் பத்திரிக்கை அடித்து உற்றார், உறவினர்களை திருமணத்திற்கு அழைத்தனர். திருச்சி அண்ணா நகர் போலீஸ் காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து நேற்று திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்தில் கலந்துகொள்ள உறவினர்கள் வந்தனர். வந்திருந்த விருந்தாளிகளுக்கு சாப்பாடு தயாரானது. இந்நிலையில் பெண் அழைப்புக்கு மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை.
மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 4 பவுன் நகை மற்றும் ரூ.20,000 ரொக்கம் தராததால் பெண் அழைப்புக்கு வரவில்லை என்றும், முழு வரதட்சணையையும் தந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டனர். இதனால் திருமணம் நின்றுபோனது. இதையடுத்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மணமகளின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணமகனின் தந்தை, தாய், தாயின் அக்கா செல்வமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணமகனை வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications