இங்கிலாந்தில் 1 வாரம் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவி்ட்டு சென்ற 'குடிகார' தாய்க்கு சிறை
லண்டன்: வீட்டில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தி ஆனந்தமாக இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரெகன் நகரைச் சேர்ந்தவர் டாலி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 20 வயதேயான அவர் திருமணமாகாமலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது 15 மாத குழந்தையை சுமார் ஒரு வார காலமாக வீட்டில் தனியாக விட்டுவிட்டு தனது தோழிகள் வீட்டுக்கு சென்று மது அருந்தி ஆனந்தமாக இருந்துள்ளார்.
அந்த ஒரு வாரமும் அவர் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு அதை இருட்டான அறையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இங்கிலாந்தின் நடுக்கும் குளிரில் அந்த குழந்தை இருந்த அறையில் ஹீட்டர் கூட இயங்கவில்லை. இருட்டில் இருந்த குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து வீட்டுக்குள் புகுந்தபோது வீடு முழுவதும் அழுக்குத் துணி, காலி பீர் பாட்டில்கள், அழுக்கான டயப்பர்கள் ஆங்காங்கே கிடந்துள்ளது. குழந்தை அழுக்கான துணியில் டயப்பர் மாற்றாமல் இருந்துள்ளது. சுமார் 24 மணிநேரமாக குழந்தையை யாரும் கவனிக்கவேயில்லை. போலீசார் குழந்தையை தூக்கிச் சென்று அதற்கு நல்ல துணி போட்டு, டயப்பர் மாற்றியுள்ளனர்.
அதற்கு சாப்பாடு கொடுத்தபோது அது சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தால் அது பல நாட்கள் பட்டினியாகக் கிடந்தது தெரிய வந்தது.
பின்னர் குழந்தையின் தாய் டாலியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு குழந்தையை கவனிக்காத குற்றத்திற்காக 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு தண்டனை கிடைத்தவுடன் டாலி நீதிமன்றத்திலேயே கதறி அழுதார்.