2007ல் இருந்தே லீக்காகி வரும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள்: குரூப் 4,8 தேர்வுகள் ரத்தாகுமா?
கடந்த 12ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்பே வெளியானதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கையால் எழுதப்பட்ட குரூப் 2 வினாத்தாளின் பிரதிகள் ஈரோட்டில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரில் பிரிண்ட் எடுக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்களை பிரிண்ட் செய்ய பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் தான் பல அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.
அந்த மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு பகுதியையும் விடாமல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டிராஷ் பகுதியைப் பார்த்தபோது அதில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான வினாத்தாள்கள் கையால் எழுதப்பட்டு அவை பிரிண்ட் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த வினாத்தாள்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடக்கும் நாளுக்கு முன்பே பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர், குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அந்த தேர்வுகளை ரத்து செய்வது குறித்து தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் வினாத்தாள்கள் கசிந்திருந்தாலும் அது அண்மையில் தான் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.