பதுக்கி வைக்கப்பட்ட பல்லாயிரம் கிரானைட் கற்கள் கண்டுபிடிப்பு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு
மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்தும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெருமளவு கிரானைட் கற்களை வெட்டி எடுத்த பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி பிடிபட்டுவிட்டார். இருப்பினும் தொடர்ந்தும் மேலூர் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கீழவளவு அருகே அம்மன்கோவில்பட்டியில் சீல் வைக்கப்பட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தின் பின்பகுதியில் சின இலந்தைகுளம் கண்மாயில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது 10 ஏக்கர் பரப்பளவில் பல்லாயிரக்கணக்கான கிரானைட் கற்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கிரானைட் கற்களுக்கு நடுவே 15 வாகனங்கள், 2 கிரேன்களும் நிறுத்தப்பட்டன.
இதேபோல் சக்கரைபீர் தர்கா மலையின் தெற்குப் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் பல்லாயிரக்கணக்கான கிரானைட் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கீழையூர் சி.சி.குளம், செட்டியார்காடு பகுதியில் நேற்றுடன் முடிவடைந்த ஆய்வில் 21 ஆயிரத்து 800 கிரானைட் கற்கள் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.கிரானைட் பதுக்கல் தொடர்பாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வழக்கு
இதனிடையே கிரானைட் குவாரி மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி சி. ராமகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் கட்சியின் குருவிஜயன் ஆகியோர் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. இதேபோல் இரண்டு பொதுநலன் மனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.