சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்க டெசோ மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரவில்லையே: சீமான்
சென்னை: சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி முகாம் முன்பு வரும் 26ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிங்கள இனவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்து வரும் முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி காலவரையற்று அடைத்து வைப்பது ஏன்? நம் ஈழத்துச் சொந்தங்கள் தமிழ்நாட்டிலேயே வதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு பலனெதுவும் கிட்டவில்லை.
ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது மவுனம் காத்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் கூட்டிய டெசோ மாநாட்டில் இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்குமாறு ஒரு தீர்மானம் போடவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கடந்த மாதம் 11ம் தேதி செங்கல்பட்டு முகாமை மறியல் செய்யச் சென்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் வன்னியில் இன்னமும் நம் சொந்தங்களை வதைக்கும் முள்வேலி முகாம்களைப் போல, இங்கே செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றத்திற்குள்ளான ஈழத்தமிழர்களில் ஒருவரான செந்தூரன், கடந்த 6ம் தேதி முதல் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய போராட்டத்தை க்யூ பிரிவு பரிகாசம் செய்துள்ளது. இதனால் நொந்துபோன செந்தூரன் இப்போது தண்ணீர் கூட குடிக்காமல் கடும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, மீண்டும் களமிறங்கிப் போராடத்தான் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பூந்தமல்லி முகாம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்களும், தமிழின உணர்வாளர்களும் பெரும் திரளாகத் திரண்டு மறியலில் ஈடுபடுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications