பிரதமரை ராஜினாமா செய்ய கோரி பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல: ஞானதேசிகன்
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்ய கோரி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, முடக்குவது சரியல்லை என்பதை பாஜக உணர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மூன்று நாட்கள் தொடர்ந்து பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடைய கோஷத்தால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த சட்டங்கள் நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய கணக்காயர் நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான அறிவிப்பில் யாரும் ஊழல் செய்ததாக சொல்லப்படவில்லை. மாறாக மன்மோகன்சிங் தலைமையிலான அரசு 2004ம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு என்பது ஏல முறையில் கொண்டு வரப்பட வேண்டும் என்று, அதுவரை இருந்த ஒதுக்கீடு முறையை மாற்றுவதற்கு முயற்சி எடுத்து 2010ம் ஆண்டு அதற்கான சட்ட வடிவமைப்பு நிறைவேற்றப்பட்டது என்பதை மறைத்துவிட்டு பிரதமர் ராஜினாமா கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல.
மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எவ்விதமான முகாந்திரமும் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே இனியாவது சிந்தனை தெளிவு பெற்று, பாராளுமன்றம் என்பது கருத்துக்களை வாதிக்கிற இடம், அதை முடக்குவது என்பது ஜனநாயகம் அல்ல என்பதை பாஜக உணர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.