இலங்கை காளியம்மன் கோயிலில் ஆடு,கோழி பலிகொடுக்க பிக்குகள் எதிர்ப்பு- கோயில் முன் போராட்டம்
சிலாபம்: இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் ஆண்டு திருவிழாவையொட்டி ஆடு,கோழி நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பவுத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆடு,கோழி பலியிடுவதற்கு சிங்கள ரவுடி அமைச்சர் மேர்வின் சில்வா ஆண்டுதோறும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இதையும் மீறி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆடு,கோழிகள் பலியிடப்பட்டு பொங்கலிடப்படும். இந்த ஆண்டும் முன்னேஸ்வரம் கோயில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று மேர்வின் சில்வா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முற்பகல் திடீரென முன்னேஸ்வரம் கோயில் முன்பாக கூடிய பவுத்த பிக்குகள், ஆடு, கோழி பலியிடுதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆடு,கோழி பலியிடுதல் தங்களது வழிபாட்டு முறை என்று அங்கு கூடியிருந்த தமிழர்கள் வாதிட்டும் பார்த்தனர். ஆனால் பவுத்த பிக்குகளை அகற்றாமல் சிங்கள போலீசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயம் ஆயிரமாண்டுகளைக் கடந்த வரலாற்றுடன் தொடர்புடையது. தமிழ்நாட்டு சோழர்கள் முதலான பல்வேறு அரசர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்திருக்கின்றனர்.