பழிபோடுறாங்க.... வேண்டுமென்றே முடக்குகிறார்கள்..: பாஜக மீது மன்மோகன் புகார்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. கடந்த வாரம் முழுவதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை பாஜகவினர் முடக்கிப் போட்டனர்.
இந்நிலையில் இன்று மக்களவை, மாநிலங்களவையில் கடுமையான கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அவர் தமது விளக்கத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையானது விவாதத்துக்குரியது. அது நாடாளுமன்ற கணக்குக் குழு முன் வைக்கப்படும்போது அது பற்றி விவாதிக்கப்படும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது சரியல்ல. 2004-ம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறையை ஏல முறையாக மாற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, ராஜஸ்தான் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான் கடுமையாக எதிர்த்தன. தலைமை கணக்கு அதிகாரி குறிப்பிட்டிருக்கும் காலப் பகுதியில் நிலக்கரித் துறையும் என் வசம் இருந்ததால் அனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன். நிலக்கரி ஒதுக்கீட்டில் பாஜக புகார் கூறுவது உள்நோக்கம் கொண்டது. நாடாளுமன்றத்தை முடக்குவதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பாஜகவினர் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்பதையே வலியுறுத்தினர் .இதனால் இன்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிப் போயின.