நெல்லையில் ஜாமீன் கிடைக்காததால் வக்கீலை தாக்கிய கைதி
நெல்லை:நெல்லையில் ஜாமீன் கிடைக்காத ஆத்திரத்தில் தனது வழக்கறிஞரைத் தாக்கிய திருவனந்தபுரம் கைதியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் முகமது காசிம். அவர் மீது திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கேரளாவில் உள்ள வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் திருவனந்தபுரத்தில் உள்ள சிறையில் உள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலுள்ள ஒரு வழக்கு தொடர்பாக அவர் ஜாமீன் கோரி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள சிறுவர் நடுவர் நீதிகுழுமத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணைக்காக அவரை கேரள போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்திருந்தனர். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் பாளையங்கோட்டை மகாராஜா நகரைச் சேர்ந்த தன்னுடைய வழக்கறிஞர் ஜான் பிரைட் மீது ஆத்திரமடைந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே ஜான் பிரைட் வந்தபோது அவரை முகமது காசிம் அடித்து உதைத்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜான் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், எஸ்.ஐ. சாமி ஆகியோர் விசாரணை நடத்தி முகமது காசிமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications