லண்டனில் பயிற்சி பெற ஐ.ஜி. சிவனாண்டிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு
சென்னை: லண்டனில் போலீஸ் பயிற்சி பெறச் செல்ல ஐ.ஜி. சிவனாண்டிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமி மற்றும் லண்டனில் உள்ள பயிற்சியகத்தில் பயிற்சி பெற தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஐ.ஜி. சிவனாண்டி, உளவுத்துறை டி.ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை நகர உளவுத்துறை இணை கமிஷனர் நல்லசிவம், தஞ்சை டி.ஐ.ஜி. அமல்ராஜ், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சங்கர், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. திருஞானம், தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க அனுமதி அளிக்குமாறு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, உளவுத்துறை டி.ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை நகர உளவுத்துறை இணை கமிஷனர் நல்லசிவம், தஞ்சை டி.ஐ.ஜி. அமல்ராஜ், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சங்கர், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. திருஞானம், தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன் ஆகிய 6 பேருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஐ.ஜி. சிவனாண்டிக்கு மட்டும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து அந்த 6 போலீஸ் அதிகாரிகளும் நேற்று முதல் ஹைதராபாத்தில் உள்ள பயிற்சியகத்தில் பயிற்சிக்கு சேர்ந்தனர். அங்கு 4 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2 வாரம் லண்டனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு செல்ல ஐ.ஜி. சிவனாண்டி மட்டும் தமிழக அரசு தடை விதித்துள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில மோசடி வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்ததையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications