மிளகாய்த் தூள் தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த இளம்பெண்
நெல்லை: குருவிகுளம் அருகே மிளகாய்ப் பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்த இளம்பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்புரம் கீழத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சங்கம்மாள். நேற்று அவர் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவி்ட்டு மாலையில் பேருந்தில் குருவிகுளம் வந்தார். அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண் அவரைத் தொடர்ந்து வந்தார். அங்குள்ள ஒரு ஊர் பெயரை சொல்லிக் கொண்டு அந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்று சங்கம்மாளிடம் வழி கேட்டார். அவர் வழி சொல்லிக் கொண்டிருக்கையில் திடீரென அந்த பெண் தான் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து சங்கம்மாள் முகத்தில் தூவிவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார். சங்கம்மாள் கூச்சல் போட்டவுடன் அந்த வழியாக வந்தவர்கள் ஓடி வந்து நகை திருடிய பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் குருவிகுளம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
எஸ்.ஐ. நாராயணன் விசாரணை நடத்தியதில் நகை திருடிய பெண் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை முத்தையன் சேர்வை தெருவைச் சேர்ந்த அருள்செல்வம் மனைவி சண்முகசுந்தரி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.