கொள்ளையர்களிடம் நகை அபேஸ் செய்த தனிப்படை போலீஸ்: விசாரிக்கும் சிபிசிஐடி
நெல்லை: கொள்ளையர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை அபகரித்ததாக தனிப்படை போலீசார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தனிப்படையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக வளளியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நெல்லை தனிப்படை போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன், திசையன்விளை சுவிசேசபுரம் ஐசக், மீனவன்குளம் வெள்ளத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வள்ளியூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது. மேலும், நெல்லை, கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளை, வழிப்பறி வழக்குகளிலும் அவர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
கொள்ளையடித்த பணத்தில் ஆதிநாராயணன் மினி பஸ், கார், பைக் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளார். ஒரு சில வழக்குகளில் மட்டும் நகை, பணத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிநாராயணன் உள்ளிட்ட 3 பேரையும் சிறையில் அடைத்தனர். வள்ளியூர் நகைக்கடையில் கொள்ளையடித்ததை கணக்கில் காட்டாமல் தனிப்படை போலீசார் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிநாராயணனிடம் இருந்து
மினி பஸ், கார், பைக் ஆகியவற்றை கைப்பற்றி வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். இந்த விபரம் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தெரிய வரவே அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விற்கப்பட்ட பஸ், கார், பைக் ஆகியவற்றை மீட்டு வள்ளியூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனால் பஸ், கார் ஆகியவற்றை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வற்புறத்தியதன்பேரில் தான் தாங்கள் அவற்றை வாங்கியதாக அவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதே போல் நகைக்கடை உரிமையாளர்களும் தங்களுக்குரிய நகை மீட்டு தரப்படவில்லை என புகார் செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் நெல்லை தனிப்படை போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.