7-வது நாளாக முடங்கிப் போன பார்லி- சுமூகமாக நடத்த வலியுறுத்தி சமாஜ்வாதி,இடதுசாரிகள் நாளை ஆர்ப்பாட்டம்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளையும் பாரதிய ஜனதா கட்சி இன்று 7வது நாளாக முடக்கி வைத்திருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த வலியுறுத்தி சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள், தெலுங்குதேசம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பாரதிய ஜனதா கட்சி முடக்கி வைத்திருக்கிறது. காலையில் அவை கூடுவதும் பின்னர் சிறிது நேரம் ஒத்திவைப்பதும் மீண்டும் கூடியவுடன் நாள் முழுவதும் ஒத்திவைப்பது என்பதுதான் கடந்த ஒருவார காலமாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் பதவி விலகினால்தான் நாடாளுமன்றத்தை நடத்த விடுவோம் என்பதில் பாஜகவினர் விடாப்பிடியாக உள்ளனர்.
புதிய அணி?
இதனிடையே டெல்லியில் இன்று காலை இடதுசாரி தலைவர்களுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெலுங்குதேசமும் கலந்து கொண்டது.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங் யாதவ், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக இயங்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாடாளுமன்ற வாயில் முன்பாக நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். இதில் இடதுசாரிகளும் கலந்து கொள்கின்றனர். தங்களது போராட்டத்துக்க் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர். சமாஜ்வாதி கட்சி உருவாக்கியிருக்கும் இந்த புதிய அணியில் பிஜூ ஜனதா தளத்தை சேர்க்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அணியே காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது ஒரு அணியாக உருவெடுக்கவும் சாத்தியமிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications