பீகாரில் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிதீஷ் குமாரே வெல்வார்.. மறைந்து போன லாலு மாயை!
என்டிடிவி நிறுவனம் இப்சாஸ் நிறுவனத்தின் துணையுடன் நாடு முழுவதும் எடுத்த சர்வேயின் முடிவுகளை ஒளிபரப்பி வருகிறது. தற்போது பீகார் மாநிலம் குறித்த சர்வே முடிவுகளை அது வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்...
பீகாரில் நிதீஷ் குமாருக்குத்தான் தொடர்ந்து அபாரமான செல்வாக்கு இருந்து வருகிறது. முதல்வர் பதவியில் அவரே நீடிக்க வேண்டும், அவரே சிறந்த முதல்வர் என்று மிகப் பெரிய அளவிலான பேர் சொல்லியுள்ளனர். லாலு பிரசாத் யாதவுக்கு மிக மோசமான ஆதரவே கிடைத்துள்ளது.
நிதீஷ் குமாருக்கு 84 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பீகாரும் நிதீஷ் பின்னால் அணி திரண்டு நிற்கிறது. லாலுவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 13 சதவீதம்தான்.
அதேசமயம், பிரதமர் பதவிக்கு நிதீஷ் வேண்டாம், எங்களது முதல்வராகவே அவர் தொடர வேண்டும் என்றும் பெரும்பாலான பீகார் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மறைந்து போன லாலு மாயை
பீகாரைப் பொறுத்தவரை லாலு பிரசாத் யாதவ் மாயை சுத்தமாக மறைந்து போய் விட்டது. அவரது செல்வாக்கு கிட்டத்தட்ட செத்துப் போய் விட்டது. அவரது ராஷ்டிரிய ஜனதாக் கட்சி ஆதரவாளர்களிடையே அவர் மீண்டும் முதல்வராக 73 சதவீத ஆதரவு இருக்கிறது என்றாலும் கூட ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் அவர் வரக் கூடாது என்று 56 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் வந்தால்
தற்போது லோக்சபா தேர்தல் வந்தால் பீகாரில் நிதீஷ் குமார், பாஜக கூட்டணியே பெரும்பாலான இடங்களில் வெல்லும் என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2009 தேர்தலி்ல இக்கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது தேர்தல் நடந்தால் 36 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றுமாம். இதில் 25 இடங்களை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் வெல்லும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. மற்றவர்களுக்கு 3 இடங்கள் கிடைக்குமாம்.
மொத்தத்தில் பீகாரில் திரும்பிய திசையெல்லாம் நிதீஷ், நிதீஷ், நிதீஷ் அலைதான் பலமாக வீசிக் கொண்டிருப்பதாக கூறுகிறது இந்த கருத்துக் கணிப்பு.