சென்னை அயப்பாக்கத்தில் பயங்கரம்... தண்ணீர் லாரி மோதி பிளஸ் டூ மாணவி பரிதாப சாவு
சென்னை: சென்னை அயப்பாக்கம் பகுதியில் இன்று காலை படு வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி பிளஸ்டூ மாணவி ஒருவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாணவியின் உடலுடன் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் தண்ணீர் எடுக்க லாரிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆவடி காமதேனுநகர் பீட்டர் கல்லூரி ரோட்டில் வசித்து வருபவர் முத்துவீரப்பன். இவரது மகள் பெரிய நாயகி. 17 வயதான இவர் அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவரது தம்பி சுப்பையா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் தனித் தனி சைக்கிளில் பள்ளிக்குச் செல்வர்.
இன்று காலை 8 மணி அளவில் பெரியநாயகியும், சுப்பையாவும் சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டனர். அயப்பாக்கம் எம்.ஜி.ஆர். புரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி பெரியநாயகி மீது மோதியது. இதில் அவர் லாரியின் சக்கரத்தில் தலைநசுங்கி பரிதாபமாக அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதைப் பார்த்து சுப்பையா அலறித் துடித்தார்.
லாரி மோதி மாணவி பலியான சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் உடலை எடுக்க விடாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடியதால் அங்கு பதட்டமானது. அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சாலை குறுகியதாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதனால் அந்த பகுதியில் லாரி செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்து கோட்டாட்சியர் சண்முகம் விரைந்து வந்தார். மக்களுடன் பேச்சு நடத்தினார். அதன் பின்னர் இனி்மேல் இப்பகுதியில் தண்ணீர் லாரிகள் இயங்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் உரிமம் இல்லாமல் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் லாரியின் கண்ணாடிகளை உடைத்து தீ வைத்தனர். இதில் டிரைவர் சீட்டின் ஒரு பகுதி எரிந்து சாம்பலானது. உடனே போலீஸார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
டிரைவர் ராஜேந்திரன் தப்பி ஓடி விட்டார். இருப்பினும் அவரைப் போலீஸார் பின்னற் கைது செய்தனர்.
அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவியரை வாகனங்கள் உயிர்ப்பலி வாங்கி வருவது பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications