சென்னையில் ராத்திரியை ஈரமாக்கிய திடீர் கன மழை... பகல் நேர வெக்கை தணிந்தது!

சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்து வருகிறது. கோடை காலம் போல நேற்று வெயில் கொடுமையாக வாட்டியது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மாலைக்கு மேல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டுப் பெய்த இந்த கன மழையால் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வெப்ப நிலை வெகுவாக குறைந்து வெக்கை தணிந்தது.
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக் காற்று, இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது.
புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்து வந்ததால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த திடீர் மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
வெப்பச்சலனமே இந்த மழைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications