ஜியோன் பள்ளி ஸ்ருதி மரண வழக்கு... முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!

பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு 11 விதிமுறைகளை உருவாக்கி அதை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை அனைத்துப் பள்ளிகளின் நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூரில் உள்ளது ஜியோன் பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, கடந்த ஜூலை 25ம் தேதி மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் அது உத்தரவிட்டது. இதுதொடர்பாக 3 முறை இழுத்தடித்த மாநில அரசு இன்று வரைவு விதிமுறைளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது...
- பள்ளி வாகனத்தில் ஓட்டுநருடன், உதவியளர் ஒருவரும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
- பள்ளி வாகனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
- கல்வி நிறுவன வாகனங்களை மாவட்டந்தோறும் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
- பள்ளிகள் அளவில் பள்ளி வாகனங்களைக் கண்காணிக்க குழுவை அமைக்க வேண்டும்.
- அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஒருவர் பள்ளி வாகனக் கண்காணிப்புக் குழுவிலும் இருக்க வேண்டும்.
- வாகன பராமரிப்புக்காக பள்ளிகளில் சிறப்பு பிரிவு இயங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் ஒட்டுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications