தமிழர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்!-ஏ.கே. அந்தோனியிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் பயிற்சி பெற வந்த இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பிற மாநிலங்களில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ் ஆர்வலர்களும், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பலத்த எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து மக்களவையிலும், மாநிலங்களையிலும் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். மத்திய அரசு இலங்கை ராணுவத்தினருக்கு துணை போகிறதா என்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் தன்னை சந்திக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பிக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் ஏ.கே.அந்தோணியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும், ஏற்கனவே பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு சபையால் அமைக்கப்பட்ட குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை இந்தியா ஆதரிக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளனர். எனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் கேட்டுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications