பங்களா இல்லை.. அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்!

வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், அப்பதவியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்தை முதல்வர் ஜெயலலிதா அமைச்சராக நியமித்தார். அவரும் அப்பதவியை மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடைகள்-அளவுகள், கடன் சட்டங்கள் மற்றும் நிவாரணம், சிட்பண்டு கம்பெனிகள் பதிவு ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு அமைச்சர்கள் வசிக்கும் பங்களாவில் இடம் கிடைக்கவில்லையாம். அதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தங்கிக் கொள்ள திட்டமிட்டாராம். ஆனால் இதைக் கேட்டு ஆடிப் போன மூத்த அதிகாரிகள், இந்த விஷயம் முதல்வர் கவனத்திற்கு சென்றால் எங்கள் பதவி அடுத்த நாளே அம்பேல் தான். அதனால் உங்களை வசதியான இடத்தில் எப்படியும் தங்க வைத்து விடுகின்றோம் என அலைந்து திரிந்து இடத்தை தேர்வு செய்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்துள்ளார்களாம்.
அமைச்சரவையில் அதிக எண்ணிக்கை இருப்பதால் தான் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என ஆருடம் சொல்கின்றனர் அதிமுக முக்கியஸ்தர்கள்.












Click it and Unblock the Notifications