நிலக்கரி சுரங்க முறைகேட்டில் திமுக அமைச்சர் ஜெகத்ரட்சகன், குடும்பத்தாருக்கு தொடர்பு
குஜராத் அரசுக்கும், புதுவை அரசுக்கும் சேர்த்து ஒரே இடமாக ஒடிஸ்ஸா மாநிலம் நைமி என்ற இடத்தில் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தது. புதுவை மாநில அரசு அதன் தொழில் முனையமான பிப்டிக் மூலம் தற்போதைய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஜேஆர் ஜென் பவர் நிறுவனத்துடன் 17.01.2007 அன்று ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
ஜெகத்ரட்சகன் தனது நிறுவனத்தை துவங்கிய 5வது நாளில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜேஆர் ஜென் பவர் நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் உள்பட அவரது குடும்பத்தார் சிலரும் டைரக்டர்களாக இருந்தனர்.
இதையடுத்து 25-7-2007ல் ஜேஆர் ஜென் பவர் நிறுவனத்திற்கு ஒடிசா மாநிலம் நைமி என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு ஜேஆர் ஜென் பவர் நிறுவனம் தனது 51 சதவீத பங்குகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த கேஎஸ்கே எனர்ஜி வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு விற்றது. இதையடுத்து நிலக்கரி சுரங்கத்தை பயன்படுத்தும் உரிமை கேஎஸ்கே நிறுவனத்திற்கு சென்றது.
இந்நிலையில் ஜெகத்ரட்சகன் தனது செல்வாக்கை பயன்படுத்தி தான் தனது நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜெகத்ரட்சகன் மறுத்துள்ளார்.