நிலக்கரி சுரங்க ஊழலில் பாஜக தலைவர் கட்காரியின் உதவியாளருக்கு தொடர்பு
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் உதவியாளர் அஜய் சன்செட்டிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் இதுவரை காங்கிரஸார் பெயர் மட்டுமே அடிபட்டு வந்த நிலையில் நேற்று திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பெயரும் அடிபட்டுள்ளது. அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் லாபம் அடைந்தவர்களில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் முக்கிய உதவியாளரான அஜய் சன்செட்டியும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
ஆனால் பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு இது குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,
பாஜக தலைவர் கட்காரியின் பிசினஸ் பார்ட்னர் அஜய் சன்செட்டி சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ரூ.490 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். சத்தீஸ்கர் சுரங்க மேம்பாட்டு கழகமும், அஜய் சன்செட்டியும் சேர்ந்து சத்தீஸ்கரில் சுரங்க வியாபாரம் செய்தனர். அதில் கிடைத்த ரூ.1,000 கோடி லாபத்தில் அஜய்க்கு ரூ.490 கோடி கிடைத்தது என்றார்.
முன்னதாக நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலகக் கோரி பாஜக செய்த தொடர் அமளியால் மழைகால கூட்டத்தொடரின் 13 நாட்களும் எந்த அரசு பணிகளும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கு முழுக்க முழுக்க பிரதமரே பொறுப்பு என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நெருக்கமாக உள்ள தொழில் அதிபர்களின் நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications