சங்ககிரி அருகே தனியார்-அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி-18 பேர் படுகாயம்
சேலம்: சங்ககிரி அருகே தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஈரோடு கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ், நேற்று மாலை 5.45 மணியளவில், சங்ககிரியை அடுத்த ஊஞ்சப்பாறை என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் சங்ககிரியில் இருந்து பவானியை நோக்கி சென்ற எஸ்.ஆர்.வி என்ற தனியார் பஸ் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் 2 பஸ்களும், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் ஓட்டுநரான திருச்செங்கோட்டை சேர்ந்த பழனியப்பன்(35), மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம்மாள்(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த வாழப்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கார்த்திகா(20) சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சதீஷ்(19), அர்ஜூன்(24), ரபீக்(29), செங்கோடன்(24), சுதாகர்(8), மகேஷ்குமார்(50), ஜெகநாதன்(47), வளர்மதி(38), பழனியம்மாள்(55), ஜெயமணி(42), அருக்காணி (55), குணசேகர்(59), சின்னப்பொண்ணு(40), சுரேஷ்(26), குமரவேல்(54) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவர்களில் லேசான காயமடைந்தவர்களுக்கு சங்ககிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 18 பேர் சேலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் எஸ்.பி.(பொறுப்பு) கண்ணம்மாள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். மேலும் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் சிவராஜ், வட்டாட்சியர் ராஜேந்திரன், அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, கலெக்டர் மகரபூஷணம் ஆகியோரும் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்திற்காக காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications