மாமன்-மைத்துனர்களுக்கு சாணி அபிஷேகம், துடைப்பத்தில் அடி-திருச்சியில் மழை வேண்டி விநோத வழிபாடு
திருச்சி: விவசாயம் தடையின்றி நடைபெற பருவ மழை பெய்ய வேண்டி, திருச்சியில் விநோதமான வழிபாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பசு மாட்டு சாணத்தை கரைத்து மாமன், மைத்துனர் உறவு முறையில் உள்ளவர்களின் மீது ஊற்றி, துடைப்பத்தால் அடித்து, மக்கள் மழை பெய்ய வேண்டினர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த திருவேங்கடாபுரத்தில் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளதால், பருவ மழை பெய்யாவிட்டால் வருமானம் பாதிக்கிறது. தற்போது கடலை, சோளம், கம்பு, துவரை போன்றவை நிலங்களில் பயிரிட்டுள்ள நிலையில் மழை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காக திருவேங்கடாபுரம் மற்றும் பக்கத்து ஊரான வெங்காயபட்டி ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் ஒன்றாக கூடினர். நேற்று மாலை 6 மணிக்கு திருவேங்கடாபுரத்தில் பள்ளி அருகே இருந்த மழைக்கல் சாமி எடுத்து நிமிர்த்தி வைத்தனர்.
மழைக்கல் சாமிக்கு நீராட்டு நடத்தி, எண்ணெய் தடவி அபிஷேகம் செய்தனர். அதன்பிறகு பசு மாட்டு சாணியை கொண்டு வந்து, சட்டிகளில் கரைத்து மாமன் முறையில் உள்ளவர்களின் மீது மைத்துனர்கள் ஊற்றி, அவர்களை துடைப்பதால் அடித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, மைத்துனர்களின் மீது மாமன்கள் சாணி கரைசலை ஊற்றி, துடைப்பதால் அடித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த வழிபாடு முடிந்த பிறகு, அடுத்த 8 நாட்களில் மழை பெய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் உருக்கமாக வேண்டி கொண்டு வீடுகளுக்கு சென்றனர். மக்கள் வேண்டி கொண்டது போல இன்னும் 8 நாட்களில் மழை பெய்துவிட்டால், மழைக்கல் சாமிக்கு பூஜை செய்து, பொங்கல் வைத்து விழா கொண்டி, சாமியை சாய்த்துவிடுவார்களாம். இல்லாவிட்டால் மீண்டும் அதே வழிபாடு நடைபெறுமாம். கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மழை வேண்டி வழிபாடு நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.