நில அபகரிப்பு புகார் வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரசாத் தேசாய் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி. கிரி, சென்னையின் மையப் பகுதியான சித்தரஞ்சன் சாலையில் விலை மதிப்புள்ள இடத்தை விற்பனை செய்ய அதன் உரிமையாளரை ஸ்டாலினும் உதயநிதியும் மிரட்டியுள்ளனர் என முதல் தகவல் அறிக்கையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் வாபஸ் பெறப்பட்டாலும் அவர்கள் மீதான குற்றச்செயல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஆகையால் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.இதைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேற்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
புகார் என்ன?
சென்னை தேனாம்பேட்டை செனடாஃப் சாலை அருகேயுள்ளது சித்தரஞ்சன் சாலை. அங்கு சுமார் 6 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடத்துடன் கூடிய நிலத்தை சேஷாத்ரி குமார் என்பவர் வைத்திருந்தார். 2010-ம் ஆண்டில் திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அப்போது, சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமது நிலத்துடன் கூடிய கட்டடத்தை வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு ரூ. 5.54 கோடிக்கு விற்க 2010-ம் ஆண்டில் ஆளும் கட்சியினர் மிரட்டியதாக 2011-ம் ஆண்டில் சேஷாத்ரி குமார் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீனிவாஸ், வேணுகோபால் ரெட்டி, ராஜா சங்கர், சுப்பா ரெட்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, புகார்தாரரான சேஷாத்ரி குமார், சுமுகமாக பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள விரும்புவதால் ஆறு பேர் மீதான தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினார். இதையடுத்து அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications