தொண்டர்களை மதிக்காத அடாவடி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடும் ஜெயலலிதா
சென்னை: கட்சித் தொண்டர்களை மதிக்காமல் அடாவடியாக செயல்படும் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரநிதிகள் ஆகியோருக்கு கடிவாளம் போட முதல்வர் ஜெயலலிதா தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் எப்போது எல்லாம் ஆட்சி அமைக்கின்றதோ அப்போது எல்லாம் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
தவறு செய்யும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், ஆன்மீகவாதிகள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் என யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல்.
இந்த நிலையில், அதிமுகவில் உள்ள பல அமைச்சர்களில் சில அமைச்சர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், சிலர் துறை மாற்றப்படுவார்கள் என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அந்த முடிவை கைவிட்டு விட்டாராம் ஜெயலலிதா.
அதற்குப் பதிலாக, தவறு செய்யும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ., உள்ளாட்சிப் பிரநிதிகள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தவறு செய்யும் நபர்கள் சமூகத்தில் எத்தகைய செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை தகுந்த ஆதாரத்துடன் கட்சி அலுவலகம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் வழங்கினால், அப் புகார்கள் மீது உறுதியாக விசாரணை நடத்தி, சாட்டை சுழற்ப்பட்டு வருகின்றது என கூறப்படுகின்றது.
முதல்வரின் தனிப்பிரிவு, போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் இல்லம் மற்றும் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வரும் ஆதாரப்பூர்வமான புகார்களை, உளவுப்பிரிவு போலீசார் கொண்ட தனிக்குழு ஒன்று விசாரணை நடத்தி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அதன் அடிப்படையில் தான் சமீபத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை பாய்ந்ததாம்.
இதனால், கடந்த ஒரு வருடமாக பதவியில் இருந்து கொண்டு தொண்டர்களை வாட்டி வதைக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் கலங்கிப் போய் உள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications