அண்ணா வளைவை அகற்ற நான் உத்தரவிடவேயில்லை: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற தான் உத்தரவிடவேயில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவரும், கபட நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்தவருமான திமுக தலைவர் கருணாநிதி, "பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு'' அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.

தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று நான் உத்தரவிட்டது குறித்து, "... அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில், முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்டநாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார்.

அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது, அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்த போது தோன்றவில்லையா?...'' என்று வினவியிருக்கிறார். அதாவது சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீர் என்று உத்தரவிட்டுள்ளதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

2010ம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது தான் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல் இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்த விதமான உத்தரவையும் இது தொடர்பாக பிறப்பிக்கவில்லை.

அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?. அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு மட்டங்களில் அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா?. இல்லை, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, "அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது'' என்று கூறியுள்ளாரா? அல்லது அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதல்வராக காலத்தை தள்ளிவிட்டு இது போன்ற கேள்வியை தனக்குத் தானே எழுப்பி பதிலளிக்கிறாரா என்பதற்கு 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தான் பதில் சொல்ல வேண்டும்.

மேம்பாலம் அமைத்திட முந்தைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டபோதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத் தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு தெரியாதா?. ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த அண்ணா வளைவை அகற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டுவிட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும்!.

எது எப்படியோ, முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவினை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் நான் உத்தரவிட்டு இருப்பேன்.

அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்தியின்மூலம் தான் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவினை அகற்றும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் நான் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வு நடத்தி ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தேன். எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு' அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எனது அரசின் இந்த நடவடிக்கை மூலம், சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு' காக்கப்பட்டது என்ற மன நிம்மதி எங்களுக்கு உள்ளது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது தலைமையிலான அரசு மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இது போன்ற அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாரா? அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+