கூடங்குளம் போலீஸ் தாக்குதலைக் கண்டித்து சென்னை, கோவையில் மாணவர்கள் போராட்டம்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து சென்னை மற்றும் கோவையில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னையில் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் கூடங்குளம் தாக்குதலைக் கண்டித்து நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களை தூண்டிவிட்டதாக மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி போலீசாரால் தூக்கி செல்லப்பட்டார்.
கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். மன்மோகன்சிங், ஜெயலலிதா, மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரின் உருவப்படங்களை தீவைத்து எரித்தனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்திபுரம் சிக்னல் பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய 43 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.பி.சிக்னல் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.