கூடங்குளம் விவகாரம்: வடமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் நெல்லை வருகை
நெல்லை: கூடங்குளத்தில் திடீரென ஏற்பட்ட கலவரம் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலுள்ள கடலோர கிராமங்களில் பரவ வாய்ப்புள்ளதால் கோவை, திருச்சி, சென்னை, வேலூர் உள்பட பல பகுதிகளில் இருந்து போலீசார் சிறப்பு வாகனங்களில் நெல்லை மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
கூடங்குளம் தடியடியை கண்டித்து தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் சில பகுதிகளில் சாலை மறியல் நடந்தது. இதனால் தூத்துக்குடி, குமரி உள்பட சில மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் கலவரம் பரவலாம் என்பதால் போலீஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசாரை வரவழைக்க உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஏடிஜிபி ஜார்ஜ் த்தரவின் பேரில் சென்னை, கோவை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மேலும் கூடுதலாக ஆயுதப்படை மற்றும் தமிழக சிறப்பு பட்டாலியன் போலீசார், அதிரடிப்படையினர் சிறப்பு வாகனங்களில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலுள்ள கடலோர கிராமங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடங்குளத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த போராட்டக்குழுவினர் மற்றும் போலீசார், அதிகாரிகள் ஆகியோர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு ஏதேனும அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.