குமரி கடற்கரை கிராமங்களில் பதட்டம் நீடிப்பு: போலீஸ் குவிப்பு
கன்னியாகுமரி: கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களி்ல் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவாதுரை பகுதி மீனவர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலய வளாகத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப் படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இன்றைய போராட்டத்தில் கன்னியாகுமரி பகுதி மீனவர்களுடன் கீழமணக்குடி, மேல்மணக்குடி, கேசவன்புத்தன்துறை, ராஜக்காமங்கலம் துறை மீனவர்களும் இணைந்து கொண்டனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து கடற்கரை கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கடற்கரைக்கு செல்லும் சாலைகளும் கண்காணிக்கப்பட்டன.
பதட்டமான பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதற்கிடையே ஆரோக்கியபுரம் ஆலயம் முன்பு ஏராளமான மீனவர்கள் திரண்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர். மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வல்லங்கள் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரை கிராமங்களில் பதட்டம் நிலவுவதால் அந்த வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கூடங்குளம், இடிந்தகரை, உவரி செல்லும் பஸ்கள் அனைத்தும் அஞ்சுகிராமத்தோடு நிறுத்தப்பட்டன.