இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் 2 இடங்களில் மோதல்: போலீஸ்காரர் உள்பட 10 பேர் காயம்
பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று இரண்டு இடங்களில் நடந்த மோதலில் போலீஸ்காரர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின விழா நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதையடுத்து சந்தைப்பேட்டை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்த அரசு நேரம் ஒதுக்கியது. அதன்படி காலை 7 மணிக்கு விழா துவங்கியவுடன் அவரது சொந்த ஊரான செல்லூர் மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு நினைவு நாள் அன்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முக்கிய தெருக்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பதட்டமான இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நினைவு நாளையொட்டி பரமக்குடி அருகே உள்ள முஷ்டக்குறிச்சியில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடு்தது போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். மேலும் இதே போன்று நெடுங்குளத்திலும் மோதல் ஏற்பட்டது. அதில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவங்களை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications