ஜேப்பியார் மீது ரூ.80 கோடி நில அபகரிப்பு புகார் கொடுத்த 81 வயது மூதாட்டி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் கிருஷ்ண மோகன்லால் பட்னானி (81). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் கடந்த 1974ம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரிடம் இருந்து செம்மஞ்சேரியில் 3.96 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதை நீலாங்கரை சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எனக்கு 81 வயது ஆகிவிட்டதால் எனது சொத்தை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி செம்மஞ்சேரியில் உள்ள எனது நிலத்தை பார்வையிட்டபோது அந்த இடத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
எனது இடத்தை வி.சுந்தரம், வி.நாராயணன் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் போலி பட்டா தயார் செய்து அதனை ஜேப்பியார் கல்வி குழும சேர்மன் ஜேப்பியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனை நீலாங்கரை சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
நான் சுந்தரத்திற்கு விற்பனை செய்ததாகவும், அவர் ஜேப்பியாருக்கு விற்றதாகவும் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. எனவே, ரூ 80 கோடி மதிப்புள்ள எனது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில் ஜேப்பியார், சுந்தரம், நாராயணன், அனிதா ஆகியோர் கூட்டு சதி செய்து எனது சொத்தை அபகரித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது நிலைத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் பற்றி விசாரணை நடத்த போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications