தூத்துக்குடியில் 3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்: கடற்கரை கிராமங்களில் பதட்டம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான போலீஸ் தடியடியை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால், மீனவ கிராமங்களில் பதட்டம் நீடிக்கிறது.
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி, கூடங்குளம் போராட்ட குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். சிலரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், போராட்டக்காரர்கள் மீதான தடியடியை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதனால் திருச்செந்தூர், வேம்பார், புன்னக்காயல், மணப்பாடு, தூத்துக்குடி போன்ற கடற்கரை பகுதியை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து கடலோர மீனவ மக்கள் சார்பில் தூத்துக்குடியில் இன்று 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி மீனவர்கள் சிலர் அரிசி, பருப்பு, எண்ணை போன்ற உணவு பொருட்களை கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் உணவு பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்தனர்.
ஆனால் கூடங்குளத்தில் 3 நாள் வன்முறைக்குப் பிறகு தற்போது அமைதி திரும்பி வருகிறது. இப்பகுதியில் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். எனினும் இடிந்தகரையில் போராட்டம் தொடர்வதால் அங்கு பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications