டீசல் விலை உயர்வை வாபஸ் பெற லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:
மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவ்வாறு திரும்ப பெறாவிட்டால் நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பஸ்சுக்கு கட்டணம், கிலோ மீட்டருக்கு விலை நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது போல் லாரிக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டன்னுக்கு இவ்வளவு கட்டணம் என்று அரசே நிர்ணயம் செய்து தர வேண்டும். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிடும். மேலும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஓரிரு நாளில் கூடி டீசல் விலையை கண்டித்து வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications