டீசல், கேஸ் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிக்கும்: கி.வீரமணி அறிக்கை
சென்னை: டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவி்த்துள்ளார்.
இது குறி்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேற்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 ஏற்றி அறிவித்துள்ளது மத்திய அரசு. அத்துடன் வீட்டு உபயோகத்திற்கென உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆறு மட்டுமே ஒரு ஆண்டுக்கு அனுமதி! (அதாவது 30 நாளுக்கு அரை சிலிண்டர்தான்!) மீறி ஏழாவது சிலிண்டர் மற்றும் கூடுதல் சிலிண்டர்களைப் பயன்படுத்தினால் மேற்கொண்ட ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 770 அளவில் கொடுத்து வாங்க வேண்டும். இதன்படி ஊடகங்கள் கூற்றுப்படியே மாதம் ஒன்றுக்கு ரூ.2,220 - அதாவது 50 விழுக்காடு செலவு கூடுதலாகும். திராவிடர் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதைவிட ஏழை, எளிய, நடுத்தர, வியாபாரிகள், விவசாயிகள், குடும்பத் தலைவிகள் ஆகியோரது வாழ்வின் முதுகெலும்பை முறிக்கும் கொடுமை வேறு உண்டா?
விவசாயிகள், தொடரும் மின்வெட்டு காரணமாக பம்ப் செட்டுகளை இயக்க டீசல் என்ஜின்களைத் தான் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 ஏற்றம் என்றால் இது விவசாய உற்பத்தி உட்பட பல தரப்பட்ட மக்களுக்குச் சுமை- அதுவும் தாங்க முடியாத சுமையாக ஆகிவிடாதா?
மத்திய ஆட்சியாளர்கள் கூட்டணி அரசு என்ற போதிலும்கூட, கட்சித் தலைவர்களை கலந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்கும் ஓர் ஆரோக்கிய அரசியலை நடத்தாமல், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக முடிவு எடுப்பது சரிதானா? (அமைச்சரவை முடிவு என்பது சரியான சமாதானமாகாது)
திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அதன் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டாமா?
எல்லாவற்றிலும் இப்படி ஒரு முடிவைத் திணிப்பது, பொது மக்களிடத்தும் சரி, கூட்டணியிலும் சரி அக்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் பெரியண்ணன் மனப்பான்மை ஆகாதா? ஆளும் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.
இல்லத்தரசிகளின் கோபாக்கினியில் சிக்கி, மீண்ட அரசுகள் உண்டா? சிந்திக்க வேண்டும் - மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சித் தலைமை.
இத்தகைய விபரீத யோசனைகளைக் கூறும் அதிகார வர்க்கத்திற்கும், வெகு மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மேலும் அந்த உயர் அதிகார வர்க்கம் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக செயற்பாடுகளை இவர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கி, இந்த ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக்கும் பணியில் உள்ளதாகவே தெரிகிறது. அதற்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதன் தலைமையும், இரையாகலாமா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications