கடற்படை விமான பீதியால் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்துப் போராட்டம்
நாகர்கோவில்: கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் நின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்து கடலில் விழுந்து உயிரிழந்தவரின் உடலைப் பெற மறுத்து நூற்றுக்கணக்கானோர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது.
நேற்று முதல் இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் நின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்குமுறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போது பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து அவரை நாகர்கோவில் கொண்டு சென்று அங்குள்ள ஜெயசேகரன் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் உடலை வாங்க மறுத்து விட்டனர் போராட்டக் குழுவினர். சகாயராஜ் மரணத்திற்கு அரசுதான் காரணம் என எழுதித் தர வேண்டும். அதுவரை உடலைப் பெற மாட்டோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications