விதி மீறிய 5 பட்டாசுத் தொழிற்சாலைகள் உரிமங்கள் ரத்து: கலெக்டர் நடவடிக்கை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 5 பட்டாசு தொழிற்சாலைகளுடைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே முதலிபட்டியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.09.12 அன்று ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 689 பட்டாசு தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பட்டாசு தொழில் தொடர்புடைய துறைகளான வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள் தொழிலாளர் நலத்துறை, மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த அலுவலர்களைக்கொண்டு குழுக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு கடந்த 10.09.12 முதல் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 88 பட்டாசு ஆலைகளிலும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட 601 பட்டாசு தொழிற்சாலைகள் உட்பட 689 பட்டாசு தொழிற்சாலைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
12.09.12 வரை மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 31 பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட 16 பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் அதிகாரிகள் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர் ஹரிஹரன் பேசியதாவது :
12.09.12 வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 41 பட்டாசு தொழிற்சாலைகள் வெடிபொருள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 30 பட்டாசு ஆலைகளுக்கும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட 11 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 ஆலைகள் உரிமம் ரத்து
மேலும் வெடிபொருள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சிவகாசியில் உள்ள ஓவியா பட்டாசு தொழிற்சாலையினையும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட அனுப்பன்குளத்தில் உள்ள சிவராஜ் பட்டாசு தொழிற்சாலை, பானையடிப்பட்டியில் உள்ள பரணி பட்டாசு தொழிற்சாலை, சுப்பரமணியாபுரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா பட்டாசு தொழிற்சாலை, மற்றும் பாறைபட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா பட்டாசு தொழிற்சாலை, குண்டாயிருப்பில் உள்ள ராம்சன் பட்டாசு தொழிற்சாலை ஆகியவற்றின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications