அடடே, ஆதீனத்துக்கு இதுக்குக் கூட நேரம் இருக்கே...!

முன்பெல்லம் ஆதீனம் தமிழகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவார். போராட்டங்களில் பங்கேற்பார். குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கூட பலமுறை போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
ஆனால் நித்தியானந்தாவின் வட்டத்துக்குள் போன பின்னர் அவருக்கு அவரைப் பற்றியே சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டது. சதா, நித்தியானந்தா விவகாரம் அவரை இழுத்தடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் முதல் முறையாக பொதுப் பிரச்சினை ஒன்று குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் ஆதீனம்.
கூடங்குளம் விவகாரம் குறித்து அவர் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கூடங்குளம் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றால், அணுமின் நிலையம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக முதல்வரின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், தமிழக அரசுக்கு எவ்விதத் தொல்லையும், துன்பமும் இல்லாமல் அமைதியான வகையில், அணுமின் நிலையம் இயங்க உறுதுணை புரிய முடியும்.
உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தக்க ஆதரவு கொடுத்திருக்கும் இத்தருணத்தில், எல்லோரும், சிந்தித்து அமைதி காத்திட வேண்டிய நேரமிது. அணுமின் நிலையத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் அதனை சுற்றிக் குடியிருப்போருக்கும், மீனவர்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என அணு விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஆய்வு செய்து, வாக்குறுதி தந்துள்ளனர்.
அதுபோல குடிநீருக்கும் எவ்விதப் பதிப்பும் கிடையாது எனத் தெளிவுபடுத்தி உள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜெய்தாபூர், கல்பாக்கம் போன்ற அணுமின் நிலையங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே நாட்டின் நலன் கருதி அணுமின் நிலையத்தை சிறப்பாக இயக்குவதற்கு, அதன் எதிர்ப்பாளர்களும், அவர்களை ஆதரிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என நாட்டின் நலன் கருதி வேண்டுகோள் வைக்கின்றோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்கின்ற மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய அரசு ஒரு உறுதிப்பாட்டை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழக முதல்வர் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவரது கோரிக்கையை, மத்திய அரசு உடனடியாகச் செவி சாய்த்து தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை நீக்கிட ஆவண செய்யுமாறு வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார் ஆதீனம்.
இன்று கோர்ட்டுகளின் உத்தரவுகளை மேற்கோள் காட்டி அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் இதே ஆதீனத்தின் வாய்தான், சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டுகளின் உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது, ஆதீனங்கள் கோர்ட்டுகளுக்கெல்லாம் போக முடியாது என்று கூறியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.











Click it and Unblock the Notifications